

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சசிகலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தின்கீழ் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிவடைந்தன. தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கு 67,812 பேர் விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை மாணவர்கள் ஜூன் 5 (இன்று) முதல் 16-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம். பாடவாரியாக விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யும் நாட்கள் விவரம் ஒரு நாளுக்கு முன்னதாக வெளியிடப்படும். மேற்கண்ட இணையதளத்திலும் விவரங்களை அறியலாம்.
விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான படிவத்தை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய கட்டணத்தை பணமாக செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.