எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

மாணவர் சேர்க்கையை விரைவாக நடத்த நடவடிக்கை
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. நீட் மறுதேர்வால் தாமதம் ஆகியுள்ள மாணவர் சேர்க்கையை விரைவாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் இத்தேர்வை நடத்துகிறது.

நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிவுக்கு காரண மானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், நீட் மறுதேர்வு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகளை ஓரிரு வாரங்களில் வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளது.

மாணவர்கள் ஆர்வம் இதன் காரணமாக, நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது சுகாதாரத் துறை இணையதளத்தில் (www.tnmedicalselection.org) நேற்று தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆன்லைனில் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசுக் கல்லூரிகளின் இடங்கள், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள், அதுதொடர்பான விவரங்கள் இணையதளத்தில் உள்ளன.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் வரை விண்ணப்பிக்கலாம். அதனால், கடைசி தேதி அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுபோலவே, நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, என்டிஏவிடம் இருந்து நீட் மதிப்பெண்கள் பெற்றுக் கொள்ளப்படும்” என்றனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in