

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் ரீசி பகுதியில் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு 2025- 2026ம் கல்வி ஆண்டில் 50 மாணவர்களை எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்க, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி கல்லூரி நிர்வாகம் விண்ணப்பம் செய்தது.
அதன் பின்னர் விண்ணப்பத்தை ஆய்வு செய்த தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எம்பிபிஎஸ் படிப்பு தொடங்க கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது. எனினும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து அக்கல்லூரியில் 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
அதன் பின் கல்லூரியைப் பற்றி பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுகுறித்து என்எம்பி ஆய்வு மற்றும் ரேட்டிங் வாரிய அதிகாரிகள் கல்லூரியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போதிய வசதிகள் இல்லாமை, போதிய ஆசிரியர்கள் இல்லாமை போன்ற பல்வேறு தவறுகள் தெரிய வந்தன. இதையடுத்து, அந்தக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை வாரியம் ரத்து செய்தது.
இது குறித்து என்எம்சி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி மருத்துவக் கல்லூரியில் தற்போது பயின்று வரும் 50 மாணவர்கள், மற்ற மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள். எனவே, 2025- 2026 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் யாரும், எம்பிபிஎஸ் படிப்பை இழக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளது.