

கராகஸ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைளத்தில் கூறியுள்ளதாவது: வெனிசுலாவில் இருந்து 3 கோடி முதல் 5 கோடி வரை உயர் தரமான கச்சா எண்ணெய்யை வழங்க இடைக்கால அரசின் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த கச்சா எண்ணெய் கொள்முதலை அவர்கள் சந்தை விலையில் வழங்க முன்வந்துள்ளனர். அந்தப் பணம் அதிபராகிய என்னால் கட்டுப்படுத்தப்படும்.
குறிப்பாக, வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காகப் அந்த தொகை பயன்படுத்தப்படும். வெனிசுலாவில் இருந்து எண்ணெய் சேமிப்பு கப்பல்கள் மூலம் எடுத்து வரப்பட்டு நேரடியாக அமெரிக்காவில் உள்ள சரக்கு இறக்கும் தளங்களுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த கைது நடவடிக்கையில் 24 வெனிசுலா பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வெனிசுலா தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில், எக்ஸான், செவ்ரான், கோனோகோ பிலிப்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.