

சென்னை: பிளாஸ்டிக் டெக்னாலஜி தொடர்பான டிப்ளமா படிப்புகளுக்கு உடனடி சேர்க்கை நடைபெற்று வருவதாக மத்திய அரசின் சிப்பெட் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்ட்ரல் பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (சிப்பெட்) கல்வி நிறுவனம் சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கல் திருவிக தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது.
மத்திய அரசின் கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறையின் கீழ் இயங்கி வரும் இந்நிறுவனம், பிளாஸ்டிக் மோல்ட் இன்ஜினியரிங் டிப்ளமா, பிளாஸ்டிக் டெக்னாலஜி டிப்ளமா, பிளாஸ்டிக் மோல்ட் டிசைன் முதுகலை டிப்ளமா ஆகிய படிப்புகளை வழங்கி வருகிறது. 3 ஆண்டு காலம் கொண்ட இந்த டிப்ளமா படிப்புகளில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்களும் ஒன்றரை ஆண்டு கால முதுகலை டிப்ளமா படிப்பில் பாலிடெக்னிக் டிப்ளமா முடித்தோரும் சேரலாம்.
மேற்கண்ட படிப்புகளுடன் ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் பிளாஸ்டிக் மோல்ட் டெக்னாலஜி டிப்ளமா, பிளாஸ்டிக் டெக்னாலஜி டிப்ளமா படிப்புகளையும் வழங்கி வருகிறது. 2 ஆண்டு கால இந்த படிப்புகளில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களும் (இயற்பியல் வேதியியல், கணிதம் ஆகிய பாடங்கள் படித்தவர்கள்) எஸ்எஸ்எல்சி-யை தொடர்ந்து 2 ஆண்டு கால ஐடிஐ படிப்பில் டூல் அண்ட் டை, ஜெனரல் மெஷினிஸ்ட், டிராப்ட்ஸ்மேன், மெக்கானிக்கல், ஃபிட்டிங், பிளாஸ்டிக், பாலிமர், கெமிக்கல் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் படித்தோரும் சேரலாம்.
தற்போது மேலே குறிப்பிடப்பட்ட டிப்ளமா, முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெற்று வருகிறது. இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் சிப்பெட் நிறுவனத்துக்கு நேரடியாகச் சென்று உடனடி சேர்க்கை பெறலாம்.கூடுதல் விவரங் களுக்கு 94449-19183, 72992-98204 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சிப்பெட் நிறுவனம் அறிவித்துள்ளது.