

சென்னை: அம்ரிதா விஷ்வ வித்யா பீடம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - செக்மேட் 2026’ எனும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டி இன்று (ஜன.10) நடைபெறுகிறது. இந்தப் போட்டியை வேலம்மாள் நெக்சஸ் இணைந்து நடத்துகிறது.
தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேஷன், காபா செஸ் அகாடமி மற்றும் ஆஷ் செஸ் ஹப் ஆகியவை இப்போட்டிகளை நடத்த உறுதுணையாக உள்ளன.
ஆட்சியர் எம்.பிரதாப்
மாணவ-மாணவிகளிடம் இருக்கும் செஸ் விளையாட்டுத் திறனை வளர்த்தெடுக்கும் நோக்கில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில், 7, 8, 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 10, 11, 12-ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கின்றனர்.
இந்தப் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் கிராமத்தில் உள்ள அம்ரிதா விஷ்வ வித்யா பீடம் சென்னை வளாகத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியை திருவள்ளூர் ஆட்சியர் எம்.பிரதாப் தொடங்கி வைக்கிறார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. பிரதமரின் ராஷ்ட்ரிய பால சாகித்ய விருதாளரும், இளம் செஸ் வீரருமான எஃப்.எம்.சார்வி அனில் குமார் பரிசுகளை வழங்க உள்ளார். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.