

சென்னை பல்கலை.
சென்னை: தொலைதூரக் கல்வி திட்ட மாணவர்கள் பழைய அரியர் தேர்வுகளை எழுத மே மாதம் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் செமஸ்டர் பாடத்திட்டத்தில் இளங்கலை, (A 18, C19, A19, C20, A20 பேட்ஜ்) முதுகலை (A18, C19, A19, C20, A20, C21, A21 பேட்ஜ்) படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பழைய அரியர் தேர்வுகளை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற கடைசியாக 2 வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. அவர்கள் டிச. 2025, ஜூன் 2026 தேர்வு அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, 2025 டிசம்பர் அமர்வுக்கான தேர்வுகள் வரும் ஜூன் மாதம் நடத்தப்பட உள்ளன. இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மே மாதத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள முகவரி www.ideunom.ac.in. பழைய அரியர் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வழங்கப்பட்டுள்ள இந்த கடைசி வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.