

புதுடெல்லி: நீட் மறுதேர்வை எவ்வித முறைகேடுகளும் இன்றி, நியாயமாக நடத்துவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தவறுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்பதாகவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
கடந்த காலக் குளறுபடிகளைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட கே.ராதாகிருஷ்ணன் குழுவின் 102 பரிந்துரைகளில், 70-க்கும் மேற்பட்ட குறுகிய காலப் பரிந்துரைகளை அரசு ஏற்கனவே அமல்படுத்தியிருந்த போதிலும் இந்தத் தவறுகள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்காக மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21 அன்று நடைபெறுகிறது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பாக வினாத்தாள் தயாரிப்பு முதல் தேர்வு முடிந்து விடைத்தாள்களைப் பாதுகாப்பாகத் திருப்புவது வரையிலான ஒவ்வொரு கட்டத்தையும் கண்காணிக்கவுள்ளன. நாடு முழுவதும் சுமார் 5,400 தேர்வு மையங்கள் மற்றும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வகுப்பறைகளில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க, இந்த மையங்கள் பெரும்பாலும் அரசு நிறுவனங்களிலேயே அமையுமாறு கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவிலும் இதற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர் குளறுபடிகளால் மாணவர்கள் சந்தித்துள்ள மன அழுத்தத்தைக் குறைப்பதே அரசின் முக்கிய நோக்கம் என்று கூறிய அமைச்சர், ரத்து செய்யப்பட்ட தேர்வுக்காக மாணவர்கள் செலுத்திய கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்றும், மறுதேர்வுக்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் தங்களின் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டதில், 2.5 லட்சம் முதல் 3 லட்சம் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மையங்களை மாற்றியுள்ளனர்.
இந்த ஒட்டுமொத்த மறுதேர்வு தயாரிப்புப் பணிகளையும் பிரதமரின் அலுவலகம் நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும், மாநில அரசுகளின் கூட்டு முயற்சியோடு தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார்.