மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு: மாணவர்கள் ஜன. 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை: மத்திய பல்கலை.களில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வெழுத மாணவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென என்டிஏ அழைப்பு விடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, அடுத்த கல்வியாண்டில் (2025-26) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு வரும் மே 11 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் பிப்ரவரி 2, 3, 4-ம் தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம். க்யூட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.
மேலும், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
