

கோப்புப் படம்
சென்னை: ஜூலை மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 10-ம் வகுப்பு துணை தேர்வுகள் ஜூலை 8 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றன. இத்தேர்வை 66,488 மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் 5-ம் தேதி (இன்று) வெளியிடப்படுகின்றன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) புதன்கிழமை பிற்பகல் முதல் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜெராக்ஸ் பிரதி: விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அதற்கான விண்ணப்பத்தை அரசு தேர்வுத்றையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 10 மற்றும் 11-ம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில நேரில் ஒப்படைக்க வேண்டும். விடைத்தாள் கட்டணத்தையும் அங்கேயே பணமாக செலுத்திவிடலாம். ஒரு பாடத்துக்கு கட்டணம் ரூ.275. உதவி இயக்குநர் அலுவலக முகவரியை தேர்வுத்துறை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை மாவட்டங் களைச் சேர்ந்த மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலுகத்தில் விண் ணப்பத்தையும் கட்டணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.