

சென்னை: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 85.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மத்திய அரசு பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், நடப்பு கல்வி ஆண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த பிப்.17 முதல் ஏப்.9-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 17 லட்சத்து 68 ஆயிரத்து 968 மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள் மதிப்பீடு, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று மதியம் 1.45 மணியளவில் சிபிஎஸ்இ இணையதளத்தில் (www.cbse.nic.in) வெளியிடப்பட்டன. இதில் 15 லட்சத்து 7 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 85.20 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.19 சதவீதம் குறைந்துள்ளது.
திருவனந்தபுரம் முதலிடம்: சிபிஎஸ்இ நிர்வாகத்தின் கீழ் அகில இந்திய அளவில் மொத்தம் 22 மண்டலங்கள் உள்ளன. தேர்ச்சி விகிதம் அடிப்படையில் திருவனந்தபுரம் மண்டலம் 95.62 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன்- டையூ உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலம் 93.84 சதவீத தேர்ச்சி பெற்று 2-ம் இடத்தையும், பெங்களூரு மண்டலம் 93.19 சதவீத தேர்ச்சி பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன. உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் மண்டலம் 72.43 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக மாணவிகளின் தேர்ச்சி 88.86 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி 82.13 சதவீதமாகவும் உள்ளது. மொத்த மாணவ, மாணவிகளில் 17.113 பேர் 95 சதவீதத்துக்கு மேற்பட்ட மதிப்பெண்ணும், 94 ஆயிரத்து 28 பேர் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் மதிப்பெண்ணை உயர்த்த விரும்பும் மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 15-ல் நடைபெறும். இதற்கான ஆன்லைன் பதிவு ஜூன் 2-ல் தொடங்கும். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்
கேந்திரிய வித்யாலயா : 98.55
ஜவகர் நவோதயா வித்யாலயா: 98.47
அரசு பள்ளிகள் : 89.55
அரசு உதவி பெறும் பள்ளிகள்: 86.07
ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள்: 85.55
தனியார் சுயநிதி பள்ளிகள்: 84.22