சிவில் சர்வீசஸ் தேர்வில் 933 பேர் வெற்றி: முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள்

இஷிதா கிஷோர்
இஷிதா கிஷோர்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்தாண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்தனர்.

ஐஏஎஸ்., ஐபிஎஸ்., ஐஎப்எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல்நிலை, இரண்டாம் நிலை தேர்வுகள், நேர்காணல் என 3 கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்தாண்டு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. மொத்தம் 933 பேரை தேர்வு செய்து பல்வேறு பணிகளுக்கு யுபிஎஸ்சி பரிந்துரைத்துள்ளது. இவர்களில் 613 பேர் ஆண்கள், 320 பேர் பெண்கள்.

இவர்களில் முதல் இடத்தை பிடித்தவர் இஷிதா கிஷோர். டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ ராம் கல்லூரியில் பொருளாதாரம் படித்தவர்.

இரண்டாவது இடம் பிடித்தவர் கரிமா லோகியா. டெல்லி பல்கலைக்கழகத்தின் கிரோரிமால் கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தவர். இவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வணிகவியல் மற்றும் கணக்குபதிவியல் பாடத்தை விருப்ப பாடமாக தேர்வு செய்து வெற்றி பெற்றுள்ளார்.

மூன்றாம் இடம் பிடித்த உமா ஹராதி, ஹைதராபாத் ஐஐடியில் பி.டெக் சிவில் இன்ஜினியரிங் முடித்தவர். இவர் மானுடவியல் பாடத்தை தேர்வு செய்து வென்றுள்ளார்.

நான்காம் இடம் பிடித்த ஸ்மிருதி மிஸ்ரா, டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற்றவர். விலங்கியல் பாடத்தை தேர்வு செய்து வென்றுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் 25 இடத்தை பிடித்தவர்களில் 14 பேர் பெண்கள், 11 பேர் ஆண்கள். வெற்றி பெற்றவர்களில் 41 பேர் மாற்றுத்திறனாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in