

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று (மே 8) முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பொறியியல் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று (மே 8) தொடங்கிறது. மாணவர்கள் http://www.tngasa.in/ என்ற இணையதளம் வழியாக வரும் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்... கடந்த ஆண்டு ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.50, எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.2 நிர்ணயிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. நடப்பாண்டு இந்த முறை மாற்றப்பட்டுள்ளது. மாணவர்கள் இனி 5 கல்லூரிகளுக்கான கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.50-ம், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் ரூ.2-ம் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வரும்23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். பின்னர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு (கல்லூரி அளவில்) மே 25 முதல் 29-ம் தேதி வரை நடத்தப்படும்.
முதல்கட்ட பொது கலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9-ம் தேதிவரையும், 2-ம்கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20-ம் தேதி வரையும் நடைபெறும். சேர்க்கைப் பணிகள் முடிந்து, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ம் தேதி தொடங் கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.