‘அகத்தியர்’ எனும் சிறிய ரக செயற்கைக்கோள் தயாரிப்புக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் 4 நாள் பயிற்சி

இந்திய தொழில்நுட்பக் காங்கிரஸ் சங்கத்தின் வழிகாட்டுதலில் செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐஐடியில் அமைந்துள்ள என்சிசிஆர்டி ஆய்வு மையத்தை மாணவர், ஆசிரியர் குழுவினர் பார்வையிட்டனர்.
இந்திய தொழில்நுட்பக் காங்கிரஸ் சங்கத்தின் வழிகாட்டுதலில் செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐஐடியில் அமைந்துள்ள என்சிசிஆர்டி ஆய்வு மையத்தை மாணவர், ஆசிரியர் குழுவினர் பார்வையிட்டனர்.
Updated on
2 min read

சென்னை: ‘அகத்தியர்’ செயற்கைக்கோள் தயாரிப்புக்காக தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் 4 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்திய தொழில்நுட்ப காங்கிரஸ் சங்கம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தயாரிக்கும் 75 சிறிய வகை செயற்கைக்கோள்களை இஸ்ரோ ராக்கெட்கள் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழகத்தில் இருந்து 5 மாணவர் செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட உள்ளன. அதில் ஒன்று, முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்களிப்பில் தயாராக உள்ளது.

பிரம்மோஸ் மையத்தின் நிறுவனரும், மூத்த விஞ்ஞானியுமான ஏ.சிவதாணுப் பிள்ளை தலைமையின்கீழ் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆர்.எம்.வாசகம், கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் வழிகாட்டுதலின்படி இந்த மாணவர் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் 26 மாவட்டங்களைச் சேர்ந்த 58 அரசுப் பள்ளிகளில் இருந்து 86 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் 22 பேர் மலை கிராமங்கள் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்களாவர்.

சுற்றுச்சூழல் பயன்பாட்டுக்காக சுமார் 2 கிலோ எடையில் தயாரிக்கப்பட உள்ள இந்த சிறிய செயற்கைக்கோளுக்கு ‘அகத்தியர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சிக்காக 86 மாணவர்கள், 20 வழிகாட்டு ஆசிரியர்கள் அடங்கிய குழு சென்னை வந்துள்ளது.

இவர்களுக்கு சென்னையில் உயர்கல்வி மற்றும் தொழிற் நிறுவனங்கள் மூலம் 4 நாட்கள் பயிற்சி தரப்படுகிறது. இந்த பயிற்சி நேற்று முன்தினம் 16-ம் தேதி தொடங்கியது. முதல்நாளில் சென்னை ஐஐடி ஆய்வு மையத்தை மாணவர்கள் பார்வையிட்டனர். 2-ம் நாளான நேற்று, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சால்கம் தொழில் நிறுவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களுக்கு பேட்டரி, சார்ஜர் தயாரிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அதன்பின் மதுரவாயலில் உள்ளடாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) சார்பில் செயற்கைக்கோள் வடிவமைத்து வரும் கல்லூரி மாணவர்களுடன், அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினர். அவர்களின் ஆய்வுப் பணிகளையும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானி டி.கோகுல், அகத்தியர் அறக்கட்டளை நிர்வாகி பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து மாணவர்கள் இன்று (பிப்.18) இந்துஸ்தான் கல்லூரிமற்றும் சில தொழில் நிறுவனங்களின் பயிற்சி முகாம்களில் பங்கேற்கின்றனர். பயிற்சியின் இறுதிநாளான நாளை(19-ம் தேதி) தனியார் நிறுவனம் விண்ணில் செலுத்தவுள்ள சவுண்ட்டிங் ராக்கெட் ஏவுதலை மாணவர்கள் பார்வையிட உள்ளனர். இந்த ஏவுதலில் பள்ளி மாணவர்கள் பங்களிப்பில் வடிவமைக்கப்பட்ட 150 நானோ செயற்கைக்கோள்கள் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த பயணங்கள் மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பதுடன், அவர்களின் செயற்கைக்கோள் தயாரிப்புக்கு உதவிகரமாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். ‘அகத்தியர்’ செயற்கைக்கோள் ஏஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அக்டோபர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in