நீலகிரியில் மாணவர்களுக்கு இயற்கை சுற்றுலா

நீலகிரியில் மாணவர்களுக்கு இயற்கை சுற்றுலா
Updated on
1 min read

உதகை: நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஒருநாள் இயற்கை சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பள்ளிகளில் சிறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கேர்ன்ஹில் காப்புக்காடு, எம்.பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வனப்பகுதியில் நீர் நடைபயிற்சி, பட்டாம்பூச்சி, பறவைகள், தாவரங்கள் கண்டறிதல், தியானம், பழங்குடியினர் பாரம்பரிய அறிவு குறித்து விளக்கப்பட்டது. இதில் தேசிய பசுமைப்படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசும்போது, ‘‘இயற்கைக்கான அறிவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு இந்த இயற்கை சுற்றுலா பயனுள்ளதாக அமையும்.

இந்த இயற்கை களப்பயணம், நீலகிரி உயிர்ச்சூழலின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளவும், அங்கு வாழும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவு, நீலகிரிக்கு உரித்தான தாவரங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்ள உதவும்’’ என்றார்.

வனவர் மேகர்நிஷா பேசும்போது, ‘‘வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை வீசிச்செல்வதையும், வனவிலங்குகளுக்கு உணவளிப்பதையும் தவிர்க்க வேண்டும். அதிக பூச்சிக்கொல்லி மருந்துகளால் சோலை வனப்பகுதிகளும் மூலிகை மற்றும் அரிய தாவரங்களும் அழியும் நிலையில் உள்ளன’’ என்றார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் குமரவேலு, நீலகிரி மாவட்ட இயற்கை விவசாய செயலாளர் ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு இயற்கை விவசாயம் குறித்து விளக்கம் அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in