பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.14 முதல் விநியோகம்: பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.14 முதல் விநியோகம்: பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்
Updated on
1 min read

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், பள்ளிகளில் அக்டோபர் 14-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வியில் கடந்த கல்வி ஆண்டில் (2021-22) பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே 6 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9.3 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூலையில் வழங்கப்பட்டன.

அச்சிடுதல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதால் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்வதில் தாமதம் நிலவியது. இதையடுத்து, தற்காலிக மதிப்பெண் சான்றுகளின் அடிப்படையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 14-ம்தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுதல் பணி கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நிறைவு பெற்றது. அதன்பிறகு, சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு, மாவட்ட தேர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் வாயிலாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் நாளைக்குள் (அக்டோபர் 13) வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து மாணவர்களுக்கு அக்டோபர் 14-ம் தேதி தொடங்கி சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்தபள்ளிகளிலும், தனித்தேர்வர்கள், தேர்வு எழுதிய மையங்களிலும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in