

சென்னை: நடப்பாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.
தமிழகத்தில் இளநிலைப் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இணையவழியில் நேற்று தொடங்கியது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ளதொழில்நுட்பக் கல்வி இயக்குநரகவளாகத்தில் இயங்கும் உதவிமையத்தை அமைச்சர் பொன்முடி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவில் முதல் சுற்று கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கல்லூரிகளைத் தேர்வு செய்பவர்களுக்கு வரும் 15-ம் தேதி சேர்க்கை கடிதம் கொடுக்கப்படும். மாணவர்கள் ஒரு வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் கட்டணம் செலுத்தி, சேர்ந்துகொள்ள வேண்டும்.
தாமதம் ஏற்பட்டால், அந்த இடம் காலியிடமாகக் கருதப்பட்டு, அடுத்த சுற்றில் சேர்க்கை நடைபெறும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 11,150 பேருக்கு வாய்ப்பு வழங்க முடியும். மேலும், புதிதாகச் சேரும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு `புதுமைப் பெண்' திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் 2-ம் ஆண்டு சேருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்கலை.யில் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கையில் உள்ள 852 இடங்களில் இதுவரை 811 பேர் சேர்ந்துள்ளனர்.
கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதற்காகத்தான் நீட் தேர்வை எதிர்க்கிறோம். அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் பழைய முறைப்படியே கல்விக் கட்டணத்தைப் பெற வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தனியார் பொறியியல் கல்லூரிகளும் நடப்பாண்டில் கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் கல்வி நிறுவனங்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.