

‘துடிப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ், இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 9,10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.75,000 மற்றும் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,25,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
தேசிய தேர்வு முகமை நடத்தும் YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி அடிப்படையில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 26 (நாளை) கடைசி நாளாகும். வரும் 31-ம் தேதி வரை திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 5-ல் நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு, 11-ம் தேதி தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.