Last Updated : 15 Aug, 2022 06:40 PM

 

Published : 15 Aug 2022 06:40 PM
Last Updated : 15 Aug 2022 06:40 PM

சுயநிதி பிரிவுகளில் அதிக கட்டணம்  செலுத்த முடியாமல் மாணவர்கள் தவிப்பு: தென்மண்டலத்தில் அரசு கலைக் கல்லூரிகள் அதிகரிக்கப்படுமா?

தமிழகத்தில் தற்போது 147 அரசு கலைக் கல்லூரிகளும், அரசு உதவி பெறும் கல்லூரிகள் 140 மற்றும் 600-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகளும் செயல்படுகின்றன. 1990-க்கு பிறகு புதிய அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கான அனுமதியை அரசு நிறுத்திய போதிலும், ஏற்கனவே உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், பிகாம், பிசிஏ, பிஎஸ்சி-ஐடி போன்ற வேலைவாய்ப்பு அதிகம் உள்ள பல்வேறு சுயநிதி பாடப் பிரிவுகளுக்கு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

தற்போது இது போன்ற பாடப்பிரிவுகளை அதிக கட்டணம் செலுத்தி படிக்க வேண்டியுள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விரும்பும் கோர்ஸ் படிக்க விரும்புவோருக்கு மதிப்பெண் அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் வேறு வழியின்றி சுயநிதி பிரிவில் அல்லது தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணத்தில் படிக்கின்றனர். தென் மண்டலத்தில் 29 அரசு கல்லூரிகளும், 44 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 60-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகளும் இயங்குகின்றன.

அரசு கல்லூரிகள் மூலம் 14,430 மாணவ, மாணவிகள் மட்டுமே அனுமதிக்க முடியும். ஆனால் 73,260-க்கும் மேற்பட்டோர் இவ்வாண்டு விண்ணப்பித்துள்ளனர். அரசு கல்லூரிகளில் காலை, மாலை சுழற்சியில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதி பிரிவுகளிலும், தனியார் கல்லூரிகளிலும் சேர வேண்டியுள்ளது. மதுரை மாநகரில் இருபாலர் அரசு கல்லூரி ஒன்று செயல்பட்டால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இது பற்றி ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த மாவட்டத்திலுள்ள அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகள், அரசு கல்லூரிகளை வரவிடாமல் முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றச்சாட்டும் உள்ளது. இருப்பினும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த சட்டப்பேரவையில் பல்கலை கட்டண வளாகத்தில் செயல்படும் அழகர்கோயில் ரோட்டிலுள்ள காமராசர் பல்கலைக்கழக கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்படும் என அறிவித்தார். இதற்கான நடவடிக்கை கிடப்பில் உள்ளது.

நகர் பகுதியில் அரசு கல்லூரியின்றி மதுரை மாநகர், சுற்றியுள்ள கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் கல்லூரிகளில் படிக்கின்றனர். பல்கலை கல்லூரியை அரசு கல்லூரியாக மேம்படுத்த வேண்டும். தென் மண்டலத்திலும் கூடுதல் அரசு கல்லூரிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “இப்பல்கலை கல்லூரி உட்பட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் கீழ் இயங்கும் 6 உறுப்புக் கல்லூரிகளும் அரசு கல்லூரியாக மாற்றப்படும் என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி சமீபத்தில் அறிவித்தார். இதன்பின், காமராசர் பல்கலை கல்லூரியின் செயல்பாடு, கோர்ஸ் விவரம், இடம் அளவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டனர். அதுகுறித்த அறிக்கை ஏற்கனவே சில மாதத்திற்கு முன்பு அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. மதுரை உட்பட தென் மண்டலத்தில் கூடுதல் கல்லூரி வருவதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவ, மாணவிகள் குறைந்த கட்டணத்தில் பயிலலாம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x