

சென்னை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவன (ஐஆர்சிடிசி) அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வே துறையில் சுற்றுலா, விருந்தோம்பல் பணிகளை செய்யும் ஐஆர்சிடிசி நிறுவனம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல வசதி செய்து தரப்படுகிறது. இதன்படி, தனி ரயில்கள் பதிவு செய்வது அல்லது தனி பெட்டிகள் மட்டும் பதிவு செய்து மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மாணவர்களின் கல்விச் சுற்றுலாவுக்கு ரூ.19.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டில் மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படவில்லை. அந்த நிதி இந்த ஆண்டில் மாணவர்களின் கல்விச் சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்படும். டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை பார்வையிட மாணவர்கள் ரயிலில் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்குமாறு, கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைத்து பள்ளிகளும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.