

புதுச்சேரி: ‘க்யூட்' தேர்வு அடிப்படையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம், பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை நடக்கவுள்ளது. இதில் படிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் ஜூன் 18-ம் தேதி கடைசி நாளாகும்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகளுக்கான சேர்க்கையானது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு க்யூட்-யூஜி (CUET-UG) 2022-ஐ அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதில் பங்கேற்க வரும் மே 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது 2022-23-ம் கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுகலை படிப்பைத் தொடர்ந்து முதுகலைப்பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு சேர்க்கையும் க்யூட் தேர்வு மூலம் நடக்க வுள்ளது. இதன் நுழைவுத் தேர்வானது க்யூட் -பிஜீ ( CUET -PG) )மூலம் நடக்கவுள்ளது. விண்ணப்பதாரர்கள் ‘க்யூட்' தேர்வுக்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக, வழங்கப்பட்ட திட்டங்கள், தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் தேர்வு தாள் குறியீடு பற்றிய தகவலுக்கும், விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை www.pondiuni.edu.in/admissions-2022-23/ என்ற முகவரியில் பார்க்க வேண்டும். மேலும், புதுப்பிப்புகள் / தகவல்களுக்கு https://cuet.nta.nic.in/ மற்றும் https://nta.ac.in/ என்ற என்டிஏவின் இணையதளத்தையும் தவறாமல் பார்க்கலாம்.
பல்வேறு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி வரும் ஜூன் 18 இரவு 11.50 வரையாகும். தேர்வு கட்டணம் செலுத்த கடைசித் தேதி வரும் ஜூன் 19ம் தேதி பிற்பகல் 11.50 வரையாகும். இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தில் ஏதேனும் திருத்தம் செய்தால் 20.06.2022 முதல் 22.06.2022 வரை மட்டுமே செய்ய முடியும்.