

கோவை: குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் மே 18-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தொடக்கநிலை வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை வழங்கப்பட வேண்டும். அதன்படி, 2022-2023-ம் கல்வியாண்டுக்கு கோவை மாவட்டத்திலுள்ள சிறுபான்மையற்ற, தனியார் சுயநிதி பள்ளிகளில், எது நுழைவு நிலையோ (எல்கேஜி அல்லது முதல் வகுப்பு) அந்த வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் வரும் 20-ம் தேதி முதல் மே 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சட்டப்படி சேர்க்கை கோரும், குழந்தைகளின் பெற்றோர் பள்ளி கல்வித்துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால் பெற்றோருக்கு ஒப்புகை சீட்டை தவறாது வழங்கவேண்டும். விண்ணப்பங்களை பள்ளியிலேயே இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம். இதுதவிர, முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். விண்ணப்பிக்கும்போது, புகைப்படம், பிறப்பு சான்று அல்லது பிறப்பு சான்றுக் கான பிற ஆவணம், இருப்பிட சான்று, வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு கீழ் உள்ளோர்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும் நபர்கள் உரிய அலுவலரிடம் பெற்ற நிரந்தர ஆவணங்களின் நகல், ஜாதிச் சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.