

கோப்புப் படம்
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்துகிறது.
அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 3-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடக்கிறது. துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் 16 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது.
ஆன்லைனில் (https://neet.nta.nic.in) இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது கடந்த பிப்.8-ம் தேதி தொடங்கி மார்ச் 11-ம் தேதி முடிவடைந்தது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சில நாட்களில் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதன்படி, 2017-ல் 11.38 லட்சம் பேர், 2018-ல் 13.26 லட்சம், 2019-ல் 15.19 லட்சம், 2020-ல் 15.97 லட்சம், 2021-ல் 16.14 லட்சம், 2022-ல் 18.72 லட்சம், 2023-ல் 20.87 லட்சம், 2024-ல் 24.06 லட்சம், 2025-ல் 22.76 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும். இத்தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.