Last Updated : 25 Dec, 2018 10:33 AM

 

Published : 25 Dec 2018 10:33 AM
Last Updated : 25 Dec 2018 10:33 AM

பார்த்துப் படிக்கலாம் காமிக்ஸ்

பள்ளியில் கடினமான பாடத்தை ஆசிரியர் நடத்திக்கொண்டிருக்கும்போது, காமிக்ஸ் புத்தகத்தை மறைத்துப் படித்த அனுபவம் நிறையப் பேருக்கு இருக்கலாம். காமிக்ஸ் படிப்பதால் குழந்தைகளுக்கு என்ன பயன் என்ற கேள்வி சென்ற தலைமுறைப் பெற்றோர்களிடம் இருந்தது.

கதையும் சித்திரங்களும் சேர்ந்து ஈர்க்கும் காமிக் வடிவத்தை வைத்து கணிதம், சமூக அறிவியல், சிக்கலான விஞ்ஞானக் கருத்தாக்கங்களைக் குழந்தைகளுக்கு எளிமையாக கற்றுக்கொடுக்க முடியும் என்கிறார் ஆசியாவைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கக் கல்வியாளரும் கார்டூனிஸ்டுமான ஜீன் லுயன் யாங்.

c1jpgஜீன் லுயன் யாங்

“எனது ஐந்தாம் வகுப்பில் டிசி காமிக்ஸ் அறிமுகமானது. வார்த்தைகளும் படங்களும் சேர்ந்த சித்திரக்கதைகள் என் தலைக்குள் இனம்புரியாத கிறுகிறுப்பை ஏற்படுத்தின. என் பெற்றோருக்கு இந்த விஷயம் பிடிக்காவிட்டாலும் தொடர்ந்து காமிக்ஸ் கதைகளின் ரசிகனாக இருந்தேன். ஒரு கட்டத்தில் கார்டூனிஸ்டாக படங்கள் வரையவும் கதை எழுதவும் தொடங்கிவிட்டேன்.

அந்த நேரத்தில்தான் எனக்கு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்தது. கலிபோர்னியா மாகாணத்தில் ஓக்லண்டில் உள்ள பிஷப் ஓ தவுத் பள்ளி அது. 17 வயதில் ஆசிரியராகச் சேர்ந்த நான் பல முயற்சிகளுக்குப் பிறகு, காமிக்ஸ் என்னும் வடிவத்தின் மூலம் கல்வி கற்றுக்கொடுக்கக் கூடிய ஆற்றலை உணர்ந்தேன்.” என்கிறார்.

ஜீன் லுயன் யாங், அல்ஜீப்ராவை காமிக்ஸில் சொல்லிக் கொடுக்க முடியும் என்பதை வெற்றிகரமாகச் செய்து காட்டியவர். “ஒரு காமிக் கதை மூலம் பாடம் எடுக்கும்போது, இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் ஒரே பக்கத்தில் முன்னும் பின்னுமாக உள்ளது. ஒரு தகவலிலிருந்து ஒரு தகவலுக்குச் செல்லும் பாதையை மாணவர்கள் தங்கள் கையிலுள்ள காகிதத்தில் பார்க்க முடியும்.

எனது உரையில் நான் சொன்ன விஷயத்தை ஒரு மாணவர் புரிந்துகொள்ளாவிட்டால், அவர்கள் தங்களிடம் உள்ள காமிக்ஸைப் பார்த்து மெதுவாகவோ வேகமாகவோ தெளிவடைய முடியும். அதனால், காமிக்ஸ் ஊடகத்தின் காட்சி இயல்பும், அதன் நிலைத்தன்மையும் அதைச் சக்திவாய்ந்த கல்விக்கருவி ஆக்குகிறது.” என்கிறார்.

c2jpgட்ராட்ஸ்கி மருதுright

1940-களிலேயே காமிக் புத்தகங்கள் குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் அமெரிக்காவில் பிரபலமாகி விட்டது. ஆனாலும்,  வகுப்பறைகளுக்குள் காமிக்ஸ் வழியாகப் பாடம் சொல்லிக் கொடுப்பது ஜீன் லுயன் யாங் வாயிலாகவே சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

மறக்க முடியாத அனுபவம்

கிண்டர்கார்டன் தொடங்கி மருத்துவக் கல்வி, கட்டிடக் கலை, இயற்பியல் என உயர்கல்வி வரை காமிக் வழியில் கற்றுக்கொடுக்கும் முறை சிறந்தது என்கிறார் தமிழக அரசின் புதிய பாடத்திட்டக் குழுவின் உறுப்பினரும் ஓவியருமான ட்ராட்ஸ்கி மருது.

“படித்து கற்று அறிந்துகொள்வதை விடப் பார்த்து கற்று அறிந்துகொள்வதே வலுவானது. ஜப்பான், பிரான்ஸ் போன்ற முன்னேறிய சமூகங்களில் சித்திரக்கதை வடிவில் கற்பதை ஒரு கலாசாரமாகவே மாற்றியுள்ளார்கள். குழந்தைகள் காட்சியாகக் கற்பதன் மூலம் பள்ளிக் கல்வியை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அனுபவமாக மாற்றிவிடலாம். காட்சியாகக் கற்பதன் (Visual learning) வழியாகத்தான். 

நம் சூழலில் ஓவியர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதியம், சித்திரங்களை அச்சிடுவதற்கு ஆகும் செலவை முன்னிட்டு 40 ,50 ஆண்டுகளாகச் சித்திரக்கதைகளைப் படிப்படி யாகக் குறைத்துவிட்டோம். இந்தச் சூழ்நிலையில்தான் தற்போது செய்நேர்த்தியும் உருவ அறிவும் கொண்ட ஓவியர்களைக் காண்பதே அரிதாகிவிட்டது.

அந்த வகையில் பள்ளிப் பாடங் களைப் பார்த்துப் படிக்கும் அனுபவத்தைக் குழந்தைகள் பெறும் வகையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி வருகிறோம். கல்வியில் ஈடுபாடு, திறன், பயன்விளைவு மூன்றையும் ஏற்படுத்துவதற்கு காமிக் ஊடகமே சிறப்பானது.” என்கிறார்.

c4jpgராகவ் முராரி

டிஜிட்டல் யுகத்தின் தேவை

மனப்பாடக் கல்வியின் மேல் மிகவும் சலிப்படைந்த சென்னையைச் சேர்ந்த ராகவ் முராரி என்னும் கணிப்பொறி அறிவியல் பொறியாளர் காமிக் கதாபாத்திரங்களையும் கதைகளையும் வைத்து ஓக்டோஃபெப் என்னும் காமிக் கல்வித் திட்டத்தை உருவாக்கியுள்ளார். நியூட்டனின் மூன்றாவது விதியை மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கு இவர் எளிமையாக உருவாக்கிய காமிக் கதை தான் இவரது முதல் முயற்சி.

சித்திரக் கதைகளின் நாடக, உணர்வுபூர்வ அம்சங்கள் குழந்தைகளுக்குக் கல்வி அனுபவத்தை உயிர்ப்புள்ளதாக்கும் என்கிறார் கல்வியாளரும் எழுத்தாளருமான மினி கிருஷ்ணன். “பாரம்பரிய சமூகங்கள் எல்லாவற்றிலும் கதைகள் பொழுதுபோக்குவதற்கும் போதனாம்சத்துக்கும் உதவிகரமாக இருந்துள்ளன.

இந்த டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் காட்சியுலகத்தோடு மிகவும் ஈடுபாடும் பரிச்சயமும் கொண்டுள்ள நிலையில் எழுத்தைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்னரே சித்திரங்கள் வழியாகப் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிப்பது அவசியம் என்று நினைக்கிறேன்.” என்கிறார்.

c3jpgமினி கிருஷ்ணன்right

காமிக்ஸ் கதைப் பாடங்களைப் பொறுத்தவரை குழந்தைகள் வார்த்தைகளை வாசிப்பதற்கு முன்னர் தொடர் சித்திரங்களைப் பார்ப்பதற்கு ஆசையுடன் முயல்கின்றனர். அதிலிருந்து ஒரு அர்த்தம் கிடைக்கிறது. இடது புறத்திலிருந்து வலதுபுறமும், மேலிருந்து கீழும் பார்க்கிறார்கள். அத்துடன் அடையாளக் குறிகளைப் புரிந்துகொள்ளத் தெரிந்துகொள்கின்றனர்.

குழந்தைகள் தங்களின் தனி அனுபவங்களோடு கதைகளைத் தொடர்பு படுத்துகின்றனர். அத்துடன் அடுத்து என்ன நிகழும் என்பதைக் கற்பனை செய்வதற்கும் ஒரு சட்டகத்துக்கும் மறு சட்டகத்துக்கும் இடையே சொல்லப்படாத விஷங்களை ஊகிப்பதற்கும் குழந்தைகள் கற்கின்றன.

இன்னும் சில ஆண்டுகளில் இந்திய வகுப்பறைகளில் ஆசிரியர்களே காமிக்ஸ் புத்தகங்களுடன் வகுப்பறைக்குள் நுழையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x