பொது தேர்வில் 100% தேர்ச்சி பெறும் பள்ளி விவரங்களை அனுப்ப உத்தரவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளின் விவரங்களை சேகரித்து அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் 3,088 உயர்நிலைப் பள்ளிகள், 3,174 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

அதை செயல்படுத்தும் விதமாக, பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சேகரிக்க வேண்டும். அவற்றை தொகுத்து இயக்குநரகத்துக்கு 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படாத வகையில் முதன்மை கல்வி அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in