ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு
Updated on
1 min read

சென்னை: ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 31) நிறைவடைகிறது. நம்நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு கணினி வாயிலாக ஏப்ரல் 29-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று (மார்ச் 31) இரவு 9 மணியுடன் நிறைவடைகிறது. விருப்பமுள்ளவர்கள் https://exams.nta.ac.in/NCET/ எனும் வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது ncet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

பிஇடி தகுதித் தேர்வு: இதேபோல், மத்திய பயோ டெக்னலாஜி (உயிரி தொழில்நுட்பம்) துறையின் ஜேஆர்எப் எனும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை கிடைப்பதற்கான பிஇடி தகுதித் தேர்வை ஆண்டுதோறும் என்டிஏ நடத்திவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிஇடி தகுதித் தேர்வு கணினி வழியில் மே 13-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு முடிந்துவிட்டது. தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ தற்போது வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதையடுத்து தேவைப்படுவோர் https://dbt2025.ntaonline.in/ எனும் வலைதளம் வழியாக இன்றைக்குள் (மார்ச் 31) திருத்தங்கள் செய்துகொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in