இடைநிலை ஆசிரியர் தேர்வில் 1,000 காலியிடங்களுக்கு இடஒதுக்கீடு வாரியான பட்டியல் வெளியீடு - டிஆர்பி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் தேர்வில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1000 காலியிடங்களுக்கான இடஒதுக்கீடு வாரியான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 2,767 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் எழுதினர். அவர்கள் அனைவரும் ஏற்கெனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) கூட வெளியிடப்படவில்லை.

தேர்வு முடிந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் உடனடியாக கீ ஆன்ஸரை வெளியிட வேண்டும் என்றும் அதோடு காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்று தேர்வெழுதிய ஆசிரியர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தொடக்கக்கல்வி இயக்ககம் நிர்ணயித்துள்ள ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தின்படி அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக தேர்வர்கள் கூறுகின்றனர்.

மேலும், கடந்த 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் எதுவும் நடைபெறவில்லை. இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது 1,768 காலியிடங்கள்தான் அதில் இடம்பெற்றிருந்தன. அதன்பிறகு கூடுதலாக 1,000 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,768 உயர்ந்தது. இந்நிலையில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1000 காலியிப்பணியிடங்களுக்குரிய இடஒதுக்கீடு வாரியான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

எனவே, விரைவில் உத்தேச விடைகள் வெளியிடப்பட்டு அதைத்தொடர்ந்து தேர்வு முடிவும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு போட்டித்தேர்வு நடத்தப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் கீ ஆன்ஸர் வெளியிடப்படாமல் இருப்பது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in