Published : 26 Feb 2025 01:15 PM
Last Updated : 26 Feb 2025 01:15 PM
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு விண்ணப்பங்களில் நாளை (பிப்ரவரி 27) முதல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
நம் நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 13 லட்சம் பேர் வரை எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்பட உள்ளன.
இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம்கட்ட தேர்வு ஏப்ரல் 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் விடுத்தும் அதற்கு என்டிஏ மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக பிப்ரவரி 27, 28-ம் தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்துகொள்ள வேண்டும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதர தகவல்கள் பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண்கள் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT