

சென்னை: முதுநிலை படிப்புகளுக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்ரவரி 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.
இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி 2025-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 22-ம் தேதியும், சீட்டா தேர்வு மார்ச் 23-ம் தேதியும் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 24-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்ரவரி 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் tancet.annauniv.edu/tancet எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் மாணவர் சேர்க்கையின் போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 8-ல் வெளியிடப்படும். இதன் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். தேர்வுக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.