பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு - விண்ணப்பிக்க ஏஐசிடிஇ அழைப்பு

பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு - விண்ணப்பிக்க ஏஐசிடிஇ அழைப்பு
Updated on
1 min read

சென்னை: பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் புதிய படிப்புகளுக்கான அனுமதி கோரி நவம்பர் 6 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

நம்நாட்டில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கீழ் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை ஏஐசிடிஇ வெளியிட்டு வருகிறது. அவற்றை முறையாகப் பின்பற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே தொடர் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதியை ஏஐசிடிஇ வழங்கும். இதுதவிர கல்லூரிகள் தங்களுக்கான அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அந்தவகையில் பொறியியல் கல்லூரிகளுக்கு 2025-26 கல்வியாண்டுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து புதிய கல்லூரிகள், படிப்புகள் தொடக்கம், அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் திறந்த நிலை, இணையவழி படிப்புக்கான அனுமதி கோரி உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க ஏஐசிடிஇ அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி அங்கீகார நீட்டிப்பு கோரும் கல்லூரிகள் நவம்பர் 6 தொடங்கி டிசம்பர் 9-ம் வரை விண்ணப்பிக்கலாம். இம்முறை மண்டலவாரியாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து புதிதாக உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்க விரும்புபவர்கள் டிசம்பர் 14 முதல் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுதவிர பிபிஏ, பிசிஏ படிப்புக்கு டிசம்பர் 30 முதல் ஜனவரி 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தவற விடுபவர்கள் அபராதத் தொகையுடன் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை /www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என ஏஐசிடிஇ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in