

கோப்புப் படம்
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தேர்வு கடினமாக இருந்ததால் இந்தாண்டு கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல், விலங்கியல், உணவு மேலாண்மை உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன. இதில் கணித பாடத்துக்கான வினாத்தாளில் மறைமுகவினாக்கள் அதிகளவில் இடம் பெற்றிருந்தன. அவற்றுக்கு பதிலளிப்பதில் சிரமமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, கணித ஆசிரியர்கள் கூறும்போது, “ஒரு மதிப்பெண் வினாக்களில் 4 வினாக்கள் சிந்தித்து பதிலளிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. இதேபோல், 2, 3, 5 மதிப்பெண் பகுதிகளில் மொத்தம் 6 வினாக்கள் மறைமுக வினாக்களாக இருந்தன.
இவற்றைப் புரிந்து கொள்ள மாணவர்கள் சிரமப்பட்டனர். அதேநேரம், கட்டாய வினாக்கள் ஓரளவுக்கு பதிலளிக்கக் கூடியதாக இருந்தன. 2, 5 மதிப்பெண் பகுதிகளில் தலா 3 வினாக்கள் எளிதாக இருந்ததால் தேர்ச்சி மதிப்பெண் பெறுவதில் சிக்கல் இருக்காது. எனினும், சென்டம் எண்ணிக்கை குறையும்”என்றனர்.
இதுவரை நடைபெற்ற தேர்வுகளில் முக்கிய பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய தேர்வுகள் கடினமாக இருந்ததால் இந்தாண்டு கட்- ஆஃப் மதிப்பெண் குறையும் என கூறப்படுகிறது.