பொறியியல் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு நாளை தொடக்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் பிஇ,பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து 9 ஆயிரத்து 545 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதியாக ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27 வரை நடைபெறும் என்றும், அதன் பிறகு ஜூலை29 முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

அதன்படி, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (22-ம்தேதி) தொடங்குகிறது. விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடி கலந்தாய்வாக இருக்கும். மற்றவர்களுக்கு வழக்கம்போல் இணையவழியில் கலந்தாய்வு நடைபெறும். விளையாட்டுப் பிரிவில் 2,112 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 408 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 1,223 பேரும், சிறப்புப் பிரிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் 386 பேரும் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.

செப்.3 வரை கலந்தாய்வு: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்து, ஜூலை 29-ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும். செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் இந்த இணையவழி கலந்தாய்வில் அகாடமிக், அரசுப் பள்ளி மாணவர்கள், தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் பங்கேற்பர்.

இதைத்தொடர்ந்து, பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்.6 முதல் 9-ம் தேதி வரையும், எஸ்சி-அருந்தியர் பிரிவில் ஏற்படும் காலியிடங்களில் எஸ்சி பிரிவு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு செப்.10, 11-ம் தேதிகளிலும் நடைபெறும். செப்.11-ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடங்கும். கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் எஸ்.புருஷோத்தமன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in