

சென்னை: பிளஸ் 1 துணைத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்களை தேர்வுத் துறை ஜூன் 25-ம் தேதி வெளியிடுகிறது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: பிளஸ் 1 வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தத்கல் உட்பட) ஹால்டிக்கெட் ஜூன் 25-ம் தேதி வெளியிடப்படுகிறது.
இதையடுத்து தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதுதவிர, செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.
ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் தேர்வெழுத அனுமதி வழங்கப்படாது. எனவே, உரிய வழிமுறைகளை பின்பற்றி தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மேலும், துணைத் தேர்வுக்கான விரிவான கால அட்டவணையை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.