பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்: 2 லட்சத்தை நெருங்கும் விண்ணப்ப பதிவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் போட்டிப்போட்டு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பிஇ, பிடெக் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.

இந்த இடங்களில் 2024-2025-ம் கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் அன்றே 29,097 பேர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்று வரும் நிலையில், 17-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 867 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 320 பேர் தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துவிட்டதாகவும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்தார். தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜுன் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in