உணவு உற்பத்தி அதிகரிக்க வேளாண் அறிவியல் துறை உதவுகிறது: ‘உயர்வுக்கு உயர் கல்வி’ நிகழ்வில் துறை வல்லுநர்கள் தகவல்

உணவு உற்பத்தி அதிகரிக்க வேளாண் அறிவியல் துறை உதவுகிறது: ‘உயர்வுக்கு உயர் கல்வி’ நிகழ்வில் துறை வல்லுநர்கள் தகவல்
Updated on
1 min read

சென்னை: உணவு உற்பத்தியை அதிகரிக்க வேளாண் அறிவியல் (அக்ரிகல்சர் சயின்ஸ்) துறை பேருதவி செய்கிறது என்று விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர் கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற நிகழ்ச்சி ஆன்லைன் வழியாக நடைபெற்றது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினியரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின.

கடந்த சனிக்கிழமை (மே 18-ம் தேதி) மாலை நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி 11-வது தொடர் நிகழ்வில் ‘ஃபுட் டெக்னாலஜி & அக்ரிகல்சர் சயின்ஸ் துறையில் உள்ள வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் துறை சார் வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் பேசியதாவது:

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.பரணி: இன்ஜினீயர், டாக்டர் என யாராக இருந்தாலும், அனைவருக்கும் உணவு முக்கியம். ஒரு உழவர் நிலத்தில் கடும் பாடுபட்டு, நமக்கான உணவை உற்பத்தி செய்து தருகிறார். அந்த உணவு உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் வகையில், இன்றைய இளைய தலைமுறையினர் வேளாண்மை சார்ந்த படிப்புகளைப் படிக்க முன்வர வேண்டும்.

மைசூரு டிஃபென்ஸ் ஃபுட்ரிசர்ச் லேபரட்டரி அசோசியேட் டைரக்டர் டாக்டர் ஆர்.குமார்: உணவு அறிவியல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் என்பது, வீட்டில் சமைக்கும் உணவுக்கு முற்றிலும் மாறாக, உணவை எப்படி நீண்டகாலத்துக்குப் பாதுகாப்பது, அதில் ஊட்டச்சத்துகள் மாறாமல் இருப்பது, உணவுப் பாதுகாப்பு, உணவைப் பதப்படுத்துதல், உணவு சட்டங்கள், உணவின் தரம் ஆகியவற்றை அறிவியல் பூர்வமாக செய்வதே இந்த துறையின் முக்கியப் பணியாகும்.

நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: பல தொழில்களைச் செய்து சுழன்றுகொண்டிருக்கும் இந்த உலகம், ஏர் தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டும் என்றார் வள்ளுவர். விவசாயத் தொழிலான ஏர் தொழிலின் விரிவுபெற்ற வடிவமே வேளாண்மை எனப்படும் அக்ரிகல்சர் துறையாகும். மாடுகள் உழன்ற வயல்வெளிகளில் இன்றைக்கு ‘அக்ரி ட்ரோன்' எனப்படும் வேளாண் ஆளில்லா விமானங்கள் உரங்களைத் தெளித்து வலம் வருகின்றன.

இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.htamil.org/UUKE11 என்ற லிங்க்-ல் பார்த்துப் பயனடையலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in