10-ம் வகுப்பு தேர்வில் கடைசி இடத்துக்கு சென்ற வேலூர் மாவட்டம்!

வேலூர் கொசப்பேட்டையில் உள்ள ஈ.வெ.ரா.நாகம்மை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒட்டப்பட்டிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவிகள். 
| படம்: வி.எம்.மணிநாதன்|
வேலூர் கொசப்பேட்டையில் உள்ள ஈ.வெ.ரா.நாகம்மை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒட்டப்பட்டிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவிகள். | படம்: வி.எம்.மணிநாதன்|
Updated on
2 min read

வேலூர்: வேலூர் மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 82.07 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 91.34 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 9.27 சதவீதம் சரிவடைந்துள்ளது என பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்.8-ம் தேதி வரை நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் 254 பள்ளிகளில் இருந்து 9,104 மாணவர்களும், 9,253 மாணவிகளும் என மொத்தம் 18,357 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது.

வேலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 6,885 மாணவர்களும், 8,181 மாணவிகளும் என மொத்தம் 15,066 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, தேர்ச்சி விகிதம் 82.07 சதவீதமாகும். இதில், மாணவர்கள் 75.63 சதவீதமும், மாணவிகள் 88.41 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 135 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4,626 மாணவர்களும், 5,857 மாணவிகளும் என 10,483 பேர் 10-ம் வகுப்பு தேர்வெழுதினர். இதில், 3.192 மாணவர்களும், 4.949 மாணவிகளும் என மொத்தம் 8.141 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 77.66 சதவீதமாக உள்ளது.

கடந்தாண்டு (2023) 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் வேலூர் மாவட்டம் 91.34 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் 21-வது இடம் பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 9.27 சதவீதம் சரிந்து தமிழகத்தின் கடைசி இடமான 38-வது இடத்துக்கு வேலூர் மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது. இது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், அரசுப்பள்ளி தேர்ச்சி விகிதமும் கடந்தாண்டு 88.99 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 11.33 சதவீதம் சரிந்து 77.66 சதவீதமாக தமிழகத்தில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதத்தை இந்த ஆண்டு அதிகரிக்க மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தமிழகத்தின் கடைசி இடத்துக்கு வேலூர் மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்படி ஒரு சரிவு ஏற்பட்டிருப்பது கல்வித்துறை அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில், பெரும்பாலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், சமூக அறிவியல் பாடத்தில்தான் மாணவ, மாணவிகள் அதிகளவில் தோல்வியடைந்துள்ளனர். மற்ற பாடங்களில் 60 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் கூட சமூக அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.

எனவே, தோல்வியடைந்த மாண வர்களின் சமூக அறிவியல் விடைத்தாள்களை மீண்டும் திருத் துவதற்கு விண்ணப்பிக்கலாம் என சில தலைமையாசிரியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தோல்வியடைந்த மாணவர்களை துணை தேர்விலேயே தேர்ச்சி பெற செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in