

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், ஜெர்மனைச் சேர்ந்த இரண்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நீர்ப் பாதுகாப்பு குறித்த புதிய கூட்டு முதுகலைப் படிப்பை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், ஜெர்மனைச் சேர்ந்த RWTH Aachen (RWTH), TU Dresden (TUD) ஆகிய இரு பல்கலைக்கழகங்களுடன் இணைந்தும், AIT, Bangkok, and UNU-FLORES ஆகியவற்றின் கூட்டு முயற்சியோடும் ‘நீர்ப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய மாற்றம் குறித்த புதிய கூட்டு முதுகலைப் படிப்பை (Joint Mater’s Program –JMP) தொடங்கியுள்ளது.
இந்த பாடத்திட்டம் மூன்று பல்கலைக்கழகங்களில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் படிப்புகளை கவனிக்கும். மாணவர்கள் சென்னை ஐஐடி-ல் கல்வியாண்டைத் தொடங்குவார்கள். TUD, RWTH பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டரைத் தொடர்வார்கள். தாங்கள் விரும்பும் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வறிக்கையை நெகிழ்வுத்தன்மையுடன் தயாரிக்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 2024 ஏப்ரல் 30 கடைசி நாளாகும். முதல் தொகுதிக்கான வகுப்புகள் 2024 ஜூலை 29 முதல் தொடங்கும். ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். https://abcd-centre.org/master-program/
இந்த பாடத்திட்டம் குறித்துப் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “நீடித்த வளர்ச்சி இலக்குகளின் குறிக்கோள்களையும் மைல்கற்களையும் எட்டவிருப்பதால், மனிதத் திறனை வளர்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்போது எந்தவொரு நாட்டிற்காகவும் மட்டுமின்றி உலகளவில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டும் நோக்கிலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு பல்வேறு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை இந்தப் படிப்பு வழங்குவதுடன், உலகளாவிய சுற்றுச்சூழலில் நீர்ப் பாதுகாப்பு சவால்களை சமாளித்தல் மற்றும் காலநிலைப் பிரச்சினைகளை சமாளிப்பது குறித்தும் கற்பிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பொறியியல் பின்னணியைக் கொண்ட இந்திய மற்றும் சர்வதேச மாணவ-மாணவிகள் இந்த முதுகலைப் படிப்பிற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
புதிய படிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த சென்னை ஐஐடி டீன் (குளோபல் என்கேஜ்மெண்ட்) பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி, “சென்னை ஐஐடி தனது சர்வதேச கல்வித் திட்டங்களை கூட்டுசேரும் பல்கலைக்கழகங்களுடன் முறையாக மேம்படுத்தி வருகிறது. RWTH, TUD போன்ற பட்டமளிக்கும் பல்கலைக்கழகங்களின் கூட்டுமுயற்சியுடன் இதுபோன்று சர்வதேச படிப்பை தொடங்கியிருப்பது இதுவே முதன்முறையாகும். இந்திய மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும்” எனக் குறிப்பிட்டார்.
நிறுவனங்கள், அரசு முகமைகள், தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து இன்டர்ன்ஷிப் மற்றும் மாஸ்டர் ஆய்வறிக்கை தயாரித்தல் நடைபெறும். இத்திட்டத்தின்மூலம் கூட்டு நிறுவனங்களின் நிபுணத்துவம் ஒருங்கிணைக்கப்படுவதுடன், பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்புடையவர்களின் தேவைகளையும் நிறைவேற்ற முடியும். வெளிநாட்டில் படித்தல், சிறப்புத் தேர்வுகளுக்கான விருப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய கட்டமைப்பு இதில் இடம்பெற்றிருக்கும்
சென்னை ஐஐடி-ன் ஜெர்மன் கூட்டுக் கல்வி நிறுவனத்துடன் உரையாடியபோது, பேராசிரியர் ஹோல்கர் ஷுட்ரம்ப், தலைவர், IWW, RWTH Aachen கூறுகையில், “தண்ணீரை வைத்துத்தான் காலநிலைத் தழுவல் தொடங்குகிறது. இந்த சவாலை சமாளிக்க இரு கண்டங்களில் உள்ள மூன்று நாடுகளில் இடம்பெற்றுள்ள நான்கு பிரபல பல்கலைக்கழகங்களைக் கொண்டு உலகளாவிய கூட்டுமுயற்சி முதுகலைப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. காலநிலைத் தழுவல் அறிவியலில் எதிர்காலத்தில் முன்னணியில் திகழ்வதற்கு உந்துதல் பெற்ற மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்” என்றார்.
TUD பல்கலைக் கழக சிவில் என்ஜினியரிங் டீன் ஆசிரியரும், ஹைட்ராலிக் என்ஜினியரிங் தலைவருமான பேராசிரியர் ஜுர்கன் ஸ்டாம் கூறும்போது, “காலநிலை மாற்றம் நன்கு நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ள பொருத்தமான உத்திகள் மற்றும் தழுவல் நடவடிக்கைகள் அவசியமாகின்றன. எங்களின் கூட்டு முதுகலைப் படிப்பை படிப்பதன் மூலம் மனிதகுலத்துக்கும், இயற்கைக்கும் நீர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுற்றுச்சூழலில் தலைமை வகிக்க முடியும்” என்றார்.
இந்த முதுகலை பாடத்திட்டத்தில் சென்னை ஐஐடி 5 பாடநெறிகளையும், TUD, RWTH ஆகியவை தலா 6 பாடநெறிகளையும் வழங்கும். இறுதி செமஸ்டரில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டு முயற்சி அல்லது இணைந்த பல்கலைக்கழகங்களின் ஆலோசனையுடன் முதுகலை ஆய்வறிக்கையை தயாரிக்கலாம்.
சர்வதேச பல்துறை முதுகலைப் பட்டம் சர்வதேச மாணவர்களுக்கான பல்வேறு பாடத்திட்டங்களை குளோபல் என்கேஜ்மெண்ட் அலுவலகம் மூலம் சென்னை ஐஐடி வழங்குகிறது. இதில் வெளிநாட்டு மாணவர்களுக்காக பிரத்யேகமாக சர்வதேச பல்துறை முதுகலைப் பாடமும் (I2MP) அடங்கும்.
வெளிநாட்டு மாணவர்களுக்காக பிரத்யேகமாக ஒன்பது பல்துறை பட்டங்களையும் சென்னை ஐஐடி வழங்குகிறது. எந்தவொரு பொறியியல்/அறிவியல் துறையைச் சேர்ந்த மாணவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். இதுதவிர பல்வேறு துறைகளில் முக்கிய மற்றும் தேர்வுசெய்யப்பட்ட படிப்புகளுக்கு இந்திய கலாச்சாரம் மற்றும் அடிப்படை ஆராய்ச்சித் திறன்கள் பற்றிய படிப்புகளை சர்வதேச மாணவர்கள் பயில்வார்கள். ஆராய்ச்சி அடிப்படையிலான முதுகலை ஆய்வறிக்கைக்கு இந்தப் பாடத்திட்டத்தின் இரண்டாம் ஆண்டு ஒதுக்கப்படும்.
பல்துறை முதுகலைப் படிப்பில் ஆர்வமுள்ள உயர்நிலை சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களுக்காக இந்த இரண்டாண்டு பாடத்திட்டம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களை பின்வரும் இணைப்பில் காணலாம். https://ge.iitm.ac.in/I2MP/#popular-programs
பொறியியல்/தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் அல்லது அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற சர்வதேச விண்ணப்பதாரர்கள் I2MP பாடத்திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.