Published : 11 Mar 2024 05:43 AM
Last Updated : 11 Mar 2024 05:43 AM

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

கோப்புப்படம்

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

தொழில்நுட்பக் கோளாறு: அதன்படி 2024-25-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 9-ல் தொடங்கி மார்ச் 9-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடைசி 2 நாட்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மாணவர்கள் பலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

இதை கருத்தில் கொண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை என்டிஏ தற்போது நீட்டித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி விருப்பமுள்ள மாணவர்கள் neet.nta.nic.in என்ற வலைதளம் வழியாக மார்ச் 16-ம் தேதிக்குள் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x