

சிவகாசி: சிவகாசி அருகே படிப்பை கைவிட்ட 6 மாணவர்களை அவர்களது வீடுகளுக்கே சென்று, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள், மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிப்பை பாதியில் நிறுத்திய இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் இடை நிற்றல் மாணவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு, ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளும் வீடுகளுக்கே நேரில் சென்று, மாணவர்கள், அவர்களது பெற்றோரை சந்தித்து பேசி மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 800-க்கும் அதிகமான இடை நிற்றல் மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் மீனம்பட்டி கிராமத்தில் ஒரு மாணவி, 5 மாணவர்கள் உட்பட 6 பேரின் வீடுகளுக்கே சென்று, கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி, அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.