Last Updated : 07 Nov, 2023 12:00 PM

 

Published : 07 Nov 2023 12:00 PM
Last Updated : 07 Nov 2023 12:00 PM

டேக்வாண்டோ போட்டிகளில் சாதிக்கும் முஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி!

ஜனனி

கடலூர்: வாட்டி வதைக்கும் குடும்ப வறுமை. இதை டேக் இட் ஈசியாக கடந்து, கல்வியோடு டேக்வாண்டோவை இறுகப் பற்றியதால் தமிழக அரசு சார்பில் ஜப்பானுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் குழுவில் வாய்ப்பு கிடைத்தது.

தனது முயற்சியால் சாதனை படைத்த ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஜப்பான் புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவ மாண விகளுக்கு கல்விச் சாரா மன்ற செயல்பாடுகள், விநாடி-வினா, சிறார் திரைப்படம், வானவில் மன்றம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப் படுகின்றன.

இப்போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும்மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு வெளி நாடு அழைத்து சென்று வருகிறது.அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் கல்விசாரா மன்ற செயல்பாடுகளால் முதலிடம் பெற்ற 25 மாணவ, மாணவிகள் ஜப்பான் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாணவ, மாணவிகளுடன் 5 ஆசிரியர்களும் நேற்று சென்னை விமான நிலையத்தி்ல் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் நவம்பர் 11-ம் தேதி சென்னைக்கு திரும்புகின்றனர். விளையாட்டு போட்டியில் மாநிலஅளவில் முதலிடம் பெற்ற ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த ஜனனியும் (17) இக்குழுவில் இடம் பெற்று ஜப்பானுக்கு சென்றுள்ளார்.

மாணவி ஜனனி கடந்தாண்டு ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்றார். தற்போது திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ படித்து வருகிறார். இவர் ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை பயிலும் போது, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்தார்.

இதன் தொடர்ச்சியாக மாநில அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். கடந்த 2016-ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி யில் முதலிடம் பெற்றார். 2018-19 ம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற போட்டியில் இரண்டா மிடம் பிடித்தார்.

2022 - 23 -ம் ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்தார். இவர் அரசுப் பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்தததால் தமிழக அரசு ஏற்பாடு செய்த ஜப்பான் நாட்டுக்கு கல்வி சுற்றுலா செல்வோர் பட்டியலில் இடம் பிடித்தார்.

ஜப்பானுக்கு புறப்பட்டு செல்லும் முன்பாக இது குறித்து மாணவி ஜனனி கூறுகையில், "எனக்கு சிறிய வயது முதலே தற்காப்பு கலை கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. ஆனால் எங்களது குடும்பம் விவசாயகுடும்பம். விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்கவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக தற்காப்பு கலையில் பயிற்சி பெற முடியவில்லை. ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தேன்.

6-ம் வகுப்பு படிக்கும் போதே டேக்வாண்டோ குறித்த ஆர்வத்தை கண்டறிந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சத்யராஜ் எனக்கு ஊக்கமளித்து தொடர்ந்து பயிற்சி அளித்தார். கராத்தே பயிற்சியாளர் ரங்க நாதன் மாஸ்டரும் எனக்கு ஊக்கம் அளித்தார். இதனால் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு எனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதன் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் ஜப்பான் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டேன். இது எனக்கும், எனது பெற்றோர் வரத ராஜன் - சுமதிக்கும் மிகவும் பெருமையாக உள்ளது. தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு நிச்சயம் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x