என்சிஇடி நுழைவு தேர்வுக்கு வரும் 25 வரை விண்ணப்பிக்கலாம்

என்சிஇடி நுழைவு தேர்வுக்கு வரும் 25 வரை விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: தேசிய கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஏ அல்லது பிஎஸ்சி பாடத்திட்டத்துடன் பிஎட் இணைத்து கற்பிக்கப்படுவதே ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்பாகும். இந்த படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது. இதற்கான இணைய விண்ணப்பப் பதிவுகடந்த ஜூன் 26-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்று (ஜூலை 19) முடிவடைய இருந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று என்சிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை என்டிஏதற்போது நீட்டித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் /ncet.samarth.ac.in/ எனும்வலைதளம் வழியாக ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதவிர, விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஜூலை 26, 27-ம் தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். என்சிஇடி நுழைவுத் தேர்வானது தமிழ்உட்பட 13 மொழிகளில் கணினி வாயிலாக நடத்தப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வு தேதி, ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in இணையதளத்தில் அறியலாம்,

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in