எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம் நீட்டிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இரண்டு நாள் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். ஜூலை 10-ம் தேதி (இன்று) மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்த நிலையில், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பது வரும் 12-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களுக்கு 21,560 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9,400 பேர் என மொத்தம் 31,000 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பது மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தரவரிசை பட்டியலை வெளியிட்டு, அடுத்த வாரம் கலந்தாய்வு தொடங்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in