

சென்னை: கிராமப்புற மாணவர்களின் திறனை மேம்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மாணவர்களின் திறனை மேம்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில், "முதல்வரின் வழிகாட்டுதலின்படி தொடர் முயற்சிகளின் பலனாக இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளோம்.
TEALS (Technical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் வரலாற்று சிறப்புமிக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழகத்தின் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய TEALS திட்டம் செயல்படுத்தப்படும்.
முதல்கட்டமாக 13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3,800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் TEALS திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறனில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்த போகும் இத்திட்டம் அனைவராலும் பாராட்டப்படும் என மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். மற்ற நாட்டின் மாணவர்களுக்கு இணையான கற்றல் தொழில்நுட்பத்தை நமது மாணவர்களுக்கும் உருவாக்குவோம்!" என்று கூறியுள்ளார்.
இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதில், “தம்பி அன்பில் மகேஸ் அமெரிக்கப் பயணத்தின்போது, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலகத் தரத்திலான தொழில்நுட்பக் கல்வி அறிமுகத்தை வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ளும் முன்முயற்சிகளைப் பற்றி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
தமிழர்களின் இதயத்துடிப்பான கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்துவதே நமது #DravidianModel அரசின் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபடும் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள்! கல்வியிற் சிறந்த தமிழரெனப் பார் போற்ற பாடுபடுவோம்!" என்று கூறியுள்ளார்.