எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் 7.5% ஒதுக்கீட்டுக்கு ஒப்புகை சான்று சமர்ப்பித்தல்: மருத்துவ கல்வி இயக்குநரகம் விளக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் 7.5% ஒதுக்கீட்டுக்கு ஒப்புகை சான்று சமர்ப்பித்தல்: மருத்துவ கல்வி இயக்குநரகம் விளக்கம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு 2023 - 2024-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது.

வரும் 10-ம் தேதியுடன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது நிறைவடையவுள்ள நிலையில், மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 569 எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள், தாங்கள் 6 முதல் 12-ம்வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் தான் படித்தோம் என்பதை உறுதி செய்ய, அப்பள்ளியின் மூலம் வழங்கப்பட்ட ஒப்புகைச் சான்றை (Bonafide Certificate) சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் (டிஎம்இ) மாணவர் சேர்க்கை செயலர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "நடப்பாண்டும், கடந்த ஆண்டும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் போது ஒப்புகைச் சான்றை இணைக்கத் தேவையில்லை என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்ர சிக்ஷா) திட்ட இயக்குநர் தகவல் அனுப்பியுள்ளார். அவர்களது தகுதிச் சான்று, பள்ளிக் கல்வி தகவல் மேலாண்மை கட்டமைப்பு (எமிஸ்) தளத்தின் மூலமாக சரிபார்த்துக் கொள்ளப்படும்.

அதே நேரம், கடந்த ஆண்டுக்கு முன்பாக பிளஸ் - 2 தேர்ச்சி பெற்ற அனைவரும் ஒப்புகைச் சான்று சமர்ப்பிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in