Published : 25 Jun 2023 04:03 AM
Last Updated : 25 Jun 2023 04:03 AM

வடசென்னையில் ஜூலை 1-ல் நான் முதல்வன் திட்டத்தில் உயர் கல்வி தொடர்பான விழிப்புணர்வு முகாம்

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக உயர் கல்வி தொடர்பான விழிப்புணர்வு முகாம் ஜூலை 1-ம் தேதி வடசென்னையில் நடைபெறவுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக ‘உயர்வுக்கு படி’ என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மு.அருணா நேற்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 2 முடித்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் வரும் ஜூலை 1-ம் தேதி வடசென்னையிலும், ஜூலை 7-ம் தேதி தென் சென்னையிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், ஐடிஐ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, வேலைவாய்ப்பு துறை, தாட்கோ உள்ளிட்டவைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் பங்கேற்ற மாணவர்களில், 80 பேர் கலை மற்றும் அறிவியில் கல்லூரியிலும், 36 பேர் பொறியியல் கல்லூரியிலும், 65 பேர் தொழிற்பயிற்சி நிறுவனத்திலும் கல்வி பயிலுவதற்காக தங்களை பதிவு செய்துள்ளனர். மேலும், 14 பேருக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்று, சாதிச்சான்று, இருப்பிடச் சான்றுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் பா.கியூரி, வேலை வாய்ப்பு பயிற்சி துறையின் மண்டல இணை இயக்குநர் ஆ.ஜோதி மணி, முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x