குரூப்-4 தேர்வில் சரியான முறையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு இறுதி வாய்ப்பு

குரூப்-4 தேர்வில் சரியான முறையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு இறுதி வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: குரூப்-4 தேர்வில் சான்றிதழை சரியாக பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இத்தகைய விண்ணப்பதாரர்கள் இன்று (ஜூன் 5) முதல் 7-ம் தேதி வரை விடுபட்ட சான்றிதழ்களையும், சரியாக பதிவேற்றம் செய்யாத சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குரூப்-4 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதில் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யாததும், முழுமையாக பதிவேற்றம் செய்யாததும், குறைபாடாக பதிவேற்றம் செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில், விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜுன் 5 முதல் 7-ம் தேதி மாலை 5.45 மணி வரை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ் செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, அந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் வாயிலாக தேர்வாணைத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in