

பாண்டீஸ்வரன்
சென்னை: கரூரில் மூதாட்டியை கொன்று, நகைகளை திருடி ரயிலில் தப்பிய இளைஞர் சென்னை சென்ட்ரலில் ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைப்பட்டியில் தனியாக வசித்து வந்தவர் தாயாரம்மாள் (79). கடந்த 26-ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை லந்தக்கோட்டையில் வசிக்கும் தனது மகள் மனோரஞ்சிதத்துடன் செல்போனில் பேசிவிட்டு, திண்ணையில் கட்டிலில் படுத்து தூங்கினார்.
மறுநாள் காலை, மூதாட்டியின் உறவினர் அருணாச்சலம் அந்த வழியாக சென்றார். அதிகாலை 4 மணிக்கே எழுந்து வீட்டு வேலைகளை செய்யும் தாயாரம்மாள் காலை 6.45 மணி ஆகியும் எழாததால் சந்தேகம் அடைந்தார்.
இதையடுத்து, வீட்டு வாசல் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, கை, கால்கள், வாய் ஆகியவை துணியால் கட்டப்பட்டு இறந்த நிலையில் தாயாரம்மாள் கிடந்தார்.
இதுகுறித்து, தாயாரம்மாளின் மகள் மனோரஞ்சிதத்துக்கு அருணாச்சலம் தகவல் தெரிவித்தார். மனோரஞ்சிதம் சாலப்பட்டிக்கு விரைந்து வந்து, தாயாரின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
மேலும், அவர் அணிந்திருந்த அரை சவரன் தோடு மற்றும் கால் சவரன் மூக்குத்தி ஆகியவற்றை காணவில்லை. இந்த கொலை தொடர்பாக மனோரஞ்சிதம், வெள்ளியானை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதன்பேரில், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பாண்டீஸ்வரன் (19) என்பவர் தான் கொலை செய்து விட்டு தப்பியது தெரிந்தது.
அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது, கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து, ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து, கரூர் மாவட்ட போலீஸார், சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், தன்பாத் விரைவு ரயில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு சென்ட்ரலுக்கு வந்தவுடன், உரிய அடையாளம் மற்றும் போட்டோவை வைத்து, பாண்டீஸ்வரனை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து, வெள்ளியணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சென்னைக்கு விரைந்த வெள்ளியணை போலீஸார், கொலையாளி பாண்டீஸ்வரனை கைது செய்து விசாரணைக்காக கரூர் அழைத்துச் சென்றனர்.