

சென்னை: ஜிஎஸ்டி ரூ.4.70 கோடி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வந்ததால் கார் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் கமலநாதன் (36).
கடந்த 10 ஆண்டுகளாக திருவேற்காடு அடுத்த புளியம்பேடு நூம்பல் பகுதியில் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வேலூரில் உள்ள அவரது சொந்த வீட்டு முகவரிக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.
அதில், ‘கமலநாதன் ரூ.4.70 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஜிஎஸ்டி அலுவலகத்தை அணுகி விளக்கம் கேட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்ஒருவர் கமலநாதனின் ஆதார், பான் அட்டை விவரங்களை பயன்படுத்தி அவரது பெயரில் ஜிஎஸ்டி பதிவு செய்து, ஓசூர், திருப்பூரில் நிறுவனம் தொடங்கி தொழில் செய்து வந்துள்ளார்.
திருப்பூரில் கமல் என்டர்பிரைஸ் என்ற பெயரில் ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் நடத்தி வந்ததாகவும், பின்னர் அதை நிறுத்திவிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, ஜிஎஸ்டி அலுவலக அதிகாரிகள் மற்றும் அதைத் தொடர்ந்து, வானகரம் போலீஸார் அறிவுறுத்தியபடி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கமலநாதன் நேற்று புகார் கொடுத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “ரூ.4.70 கோடி ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்று எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது.
எனது ஆதார், பான் விவரங்களைத் திருடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.