

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன் (42), தொழிலாளியான இவர், கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, மகாராஜனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
குற்றம்சாட்டப்பட்ட மகாராஜனுக்கு, இயற்கை மரணம் வரும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.12,500 அபராதம் விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ் மற்றும் வழக்கை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர் லெட்சுமி பிரபா, சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஜுடு ஏஞ்சலோ, தலைமை காவலர் அரிராணி ஆகியோரை எஸ்.பி. மதன் பாராட்டினார்.