

சந்திரன்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 5 மரண தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிங்கம்புணரி அருகே மருதிபட்டியைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி சந்திரன் (49). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர், 2023-ம் ஆண்டிலிருந்து 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து ஒரு சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து சந்திரனை 2024 பிப்ரவரி 13-ம் தேதி கைது செய்தனர். பின்னர், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் தனலெட்சுமி ஆஜராகி வாதாடினார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் சந்திரனுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகோகுல்முருகன் நேற்று தீர்ப்பளித்தார்.
அந்தத் தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது: குற்றம்சாட்டப்பட்ட சந்திரன், ‘வீடியோ கேம்களை’ காண்பித்தும், தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்தும், செலவுக்கு ரூ.20 கொடுத்தும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அரிதிலும் அரிதான இந்த வழக்கில் புகார் அளித்த சிறுமியின் தந்தை மற்றும் நீதிமன்றத்தில் தைரியமாக உண்மையைக் கூறிய பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளை பாராட்டுகிறேன்.
குற்றம் சாட்டப்பட்ட சந்திரனுக்கு, சிறுமிகளை மிரட்டிய குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம், ஒருசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை, மற்ற 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு தனித்தனியாக சாகும் வரை 4 ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
மேலும் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 5 மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு அளித்து முடித்தவுடன் தீர்ப்பு எழுதிய பேனா முனையை உடைத்து வீசி யெறிந்தார். சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.